
ஆற்றுக் கேபிறைக் கீற்றுக் கேசடை
ஆக்கிச் சேவடி தூக்கி ஆருயிர்ப்
பேற்றுக்கே நடிப்பாய் மணிமன்றில் பெருந்தகையே
சோற்றுக் கேஇதஞ் சொல்லிப் பேதையர்
சூழல் வாய்த்துயர் சூழ்ந்து மேற்றிசைக்
காற்றுக்கே கறங்காய்ச் சுழன்றேனைக் கருதுதியோ.
ஞாலத் தார்தமைப் போலத் தாம்இங்கு
நண்ணு வார்நின்னை எண்ணு வார்மிகு
சீலத்தார் சிவமே எவையும்எனத் தேர்ந்தனரால்
சாலத் தான்கொடுஞ் சாலத் தாலத்தைத்
தாவி நான்பெரும் பாவி ஆயினன்
ஏலத்தார் குழலா ளிடத்தாய்எனை எண்ணுதியோ.
அண்ண லேநின்னை எண்ண லேன்என்னை
ஆண்டு கொண்டனை மீண்டும் விண்டனன்
நண்ணலே அறியேன் கடையேன்சிறு நாயனையேன்
பெண்ண லேன்இயல் ஆண லேன்அலிப்
பேய னேன்கொடும் பேதை யேன்பிழை
கண்ணலே புரியா தினும்மீட்கக் கருதுதியோ.
வல்லி ஆனந்த வல்லி சேர்மண
வாள னேஅரு ளாள னேமலை
வில்லியாய் நகைத்தே புரம்வீழ்த்த விடையவனே
புல்லி யான்புலைப் போகம் வேட்டுநின்
பொன்ன டித்துணைப் போகம் போக்கினேன்
இல்லிஆர் கடம்போ லிருந்தேன்எனை எண்ணுதியோ.



