
திங்கள் விளங்கும் சடைத்தருவைத் தீம்பாற் சுவையைச் செந்தேனைச்
செங்கை மருவும் செழுங்கனியைச் சீரார் முக்கட் செங்கரும்பை
மங்கை மலையாள் மணந்தபெரு வாழ்வைப் பவள மலைதன்னை
எங்கள் பெருமான் தனைஅந்தோ என்னே எண்ணா திருந்தேனே.
அன்பர் இதய மலர்க்கோயில் அமர்ந்த பரமா னந்தத்தைத்
துன்பம் அகலச் சுகமளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை
வன்ப ரிடத்தின் மருவாத மணியை மணியார் மிடற்றானை
இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணா திருந்தேனே.
ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்
பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை
அருமைக் களத்தில் கருமைஅணி அம்மான் தன்னை எம்மானை
இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே.
கறையோர் கண்டத் தணிந்தருளும் கருணா நிதியைக் கண்ணுதலை
மறையோன் நெடுமாற் கரியசிவ மலையை அலையில் வாரிதியைப்
பொறையோர் உள்ளம் புகுந்தொளிரும் புனித ஒளியைப் பூரணனாம்
இறையோன் தன்னை அந்தோநான் என்னே எண்ணா திருந்தேனே.



