திருவருட்பா  71. திருவருட் பதிகம்

வளங்கிளர்  சடையும்  விளங்கிய  இதழி  மாலையும்  மால்அயன்  வழுத்தும் 
குளங்கிளர்  நுதலும்  களங்கிளர்  மணியும்  குலவுதிண்  புயமும்அம்  புயத்தின் 
தளங்கிளர்  பதமும்  இளங்கதிர்  வடிவும்  தழைக்கநீ  இருத்தல்கண்  டுவத்தல் 
உளங்கிளர்  அமுதே  துளங்குநெஞ்  சகனேன்  உற்றரு  ணையில்பெற  அருளே. 
1
அன்பர்தம்  மனத்தே  இன்பமுற்  றவைகள்  அளித்தவர்  களித்திடப்  புரியும் 
பொன்பொலி  மேனிக்  கருணையங்  கடலே  பொய்யனேன்  பொய்மைகண்  டின்னும் 
துன்பமுற்  றலையச்  செய்திடேல்  அருணைத்  தொல்நக  ரிடத்துன  தெழில்கண் 
டென்புளம்  உருகத்  துதித்திடல்  வேண்டும்  இவ்வரம்  எனக்கிவண்  அருளே. 
2
பூத்திடும்  அவனும்  காத்திடு  பவனும்  புள்விலங்  குருக்கொடு  நேடி 
ஏத்திடும்  முடியும்  கூத்திடும்  அடியும்  இன்னமும்  காண்கிலர்  என்றும் 
கோத்திடும்  அடியர்  மாலையின்  அளவில்  குலவினை  என்றுநல்  லோர்கள் 
சாற்றிடும்  அதுகேட்  டுவந்தனன்  நினது  சந்நிதி  உறஎனக்  கருளே. 
3
அருள்பழுத்  தோங்கும்  ஆனந்தத்  தருவே  அற்புத  அமலநித்  தியமே 
தெருள்பழுத்  தோங்கும்  சித்தர்தம்  உரிமைச்  செல்வமே  அருணையந்  தேவே 
இருள்பழுத்  தோங்கும்  நெஞ்சினேன்  எனினும்  என்பிழை  பொறுத்துநின்  கோயில் 
பொருள்பழுத்தோங்கும்  சந்நிதி  முன்னர்ப்போந்துனைப்  போற்றுமாறருளே. 
4
மறையும்  அம்  மறையின்  வாய்மையும்  ஆகி  மன்னிய  வள்ளலே  மலர்மேல் 
இறையும்மா  தவனும்  இறையும்இன்  னவன்என்  றெய்திடா  இறைவனே  அடியேன் 
பொறையும்நன்  னிறையும்  அறிவும்நற்  செறிவும்  பொருந்திடாப்  பொய்யனேன்  எனினும் 
அறையும்நற்  புகழ்சேர்  அருணையை  விழைந்தேன்  அங்கெனை  அடைகுவித்  தருளே. 
5
தேடுவார்  தேடும்  செல்வமே  சிவமே  திருஅரு  ணாபுரித்  தேவே 
ஏடுவார்  இதழிக்  கண்ணிஎங்  கோவே  எந்தையே  எம்பெரு  மானே 
பாடுவார்க்  களிக்கும்  பரம்பரப்  பொருளே  பாவியேன்  பொய்யெலாம்  பொறுத்து 
நாடுவார்  புகழும்  நின்திருக்  கோயில்  நண்ணுமா  எனக்கிவண்  அருளே. 
6
உலகுயிர்  தொறும்நின்  று‘ட்டுவித்  தாட்டும்  ஒருவனே  உத்தம  னேநின் 
இலகுமுக்  கண்ணும்  காளகண்  டமும்மெய்  இலங்குவெண்ணீற்றணி  எழிலும் 
திலகஒள்  நுதல்உண்  ணாமுலை  உமையாள்  சேரிடப்  பாலுங்கண்  டடியேன் 
கலகஐம்  புலன்செய்  துயரமும்  மற்றைக்  கலக்கமும்  நீக்குமா  அருளே. 
7
அருட்பெருங்  கடலே  ஆனந்த  நறவே  அடிநடு  அந்தமுங்  கடந்த 
தெருட்பெரு  மலையே  திருஅணா  மலையில்  திகழ்சுயஞ்  சோதியே  சிவனே 
மருட்பெருங்  கடலின்  மயங்குகின்  றேன்என்  மயக்கெலாம்  ஒழிந்துவன்  பிறவி 
இருட்பெருங்  கடல்விட்  டேறநின்  கோயிற்  கெளியனேன்  வரவரம்  அருளே. 
8
கருணையங்  கடலே  கண்கள்மூன்  றுடைய  கடவுளே  கமலன்மால்  அறியா 
அருணைஎங்  கோவே  பரசிவா  னந்த  அமுதமே  அற்புத  நிலையே 
இருள்நிலம்  புகுதா  தெனைஎடுத்  தாண்ட  இன்பமே  அன்பர்தம்  அன்பே 
பொருள்நலம்  பெறநின்  சந்நிதிக்  கெளியேன்  போந்துனைப்  போற்றும்வா  றருளே. 
9
ஏதுசெய்  திடினும்  பொறுத்தருள்  புரியும்  என்உயிர்க்  கொருபெருந்  துணையே 
தீதுசெய்  மனத்தார்  தம்முடன்  சேராச்  செயல்எனக்  களித்தஎன்  தேவே 
வாதுசெய்  புலனால்  வருந்தல்செய்  கின்றேன்  வருந்துறா  வண்ணம்எற்  கருளித் 
தாதுசெய்  பவன்ஏத்  தருணையங்  கோயில்  சந்நிதிக்  கியான்வர  அருளே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com