திருவருட்பா  70. கருணை பெறா திரங்கல்

நன்றி  ஒன்றிய  நின்னடி  யவர்க்கே 
நானும்  இங்கொரு  நாயடி  யவன்காண் 
குன்றின்  ஒன்றிய  இடர்மிக  உடையேன் 
குற்றம்  நீக்கும்நல்  குணமிலேன்  எனினும் 
என்றின்  ஒன்றிய  சிவபரஞ்  சுடரே 
இன்ப  வாரியே  என்னுயிர்த்  துணையே 
ஒன்றின்  ஒன்றிய  உத்தமப்  பொருளே 
உனைஅ  லால்எனை  உடையவர்  எவரே. 
1
தீது  செய்தனன்  செய்கின்றேன்  செய்வேன் 
தீய  னேன்கொடுந்  தீக்குண  இயல்பே 
ஏது  செய்தன  னேனும்என்  தன்னை 
ஏன்று  கொள்வதெம்  இறைவநின்  இயல்பே 
ஈது  செய்தனை  என்னைவிட்  டுலகில் 
இடர்கொண்  டேங்கென  இயம்பிடில்  அடியேன் 
ஓது  செய்வதொன்  றென்னுயிர்த்  துணையே 
உனைஅ  லால்எனை  உடையவர்  எவரே. 
2
சென்ற  நாளினும்  செல்கின்ற  நாளில் 
சிறிய  னேன்மிகத்  தியங்குறு  கின்றேன் 
மன்ற  நான்இவண்  இவ்வகை  ஆனால் 
வள்ள  லேநினை  வழுத்துமா  றெதுவோ 
என்ற  னால்இனி  ஆவதொன்  றிலைஉன் 
எண்ணம்  எப்படி  அப்படி  இசைக 
உன்ற  னால்களித்  துவகைகொள்  கின்றேன் 
உனைஅ  லால்எனை  உடையவர்  எவரே. 
3
மையல்  வாழ்க்கையில்  நாள்தொறும்  அடியேன் 
வருந்தி  நெஞ்சகம்  மாழ்குவ  தெல்லாம் 
ஐய  ஐயவோ  கண்டிடா  தவர்போல் 
அடம்பி  டிப்பதுன்  அருளினுக்  கழகோ 
செய்ய  மேல்ஒன்றும்  அறிந்திலன்  சிவனே 
தில்லை  மன்றிடைத்  தென்முக  நோக்கி 
உய்ய  வைத்ததாள்  நம்பிநிற்  கின்றேன் 
உனைஅ  லால்எனை  உடையவர்  எவரே. 
4
மண்ண  கச்சிறு  வாழ்க்கையின்  பொருட்டால் 
வருந்தி  மற்றதன்  வன்மைகள்  எல்லாம் 
எண்ண  எண்ணஎன்  நெஞ்சகம்  பதைப்புற் 
றேங்கி  ஏங்கிநான்  இளைப்புறு  கின்றேன் 
அண்ணல்  நின்திரு  அருட்டுணை  அடைந்தால் 
அமைந்து  வாழ்குவன்  அடைவகை  அறியேன் 
உண்ண  நல்அமு  தனையஎம்  பெருமான் 
உனைஅ  லால்எனை  உடையவர்  எவரே. 
5
அன்னை  அப்பனும்  நீஎன  மகிழ்ந்தே 
அகங்கு  ளிர்ந்துநான்  ஆதரித்  திருந்தேன் 
என்னை  இப்படி  இடர்கொள  விடுத்தால் 
என்செய்  கேன்  இதை  யாரொடு  புகல்கேன் 
பொன்னை  ஒத்தநின்  அடித்துணை  மலரைப் 
போற்று  வார்க்குநீ  புரிகுவ  திதுவோ 
உன்னை  எப்படி  ஆயினும்  மறவேன் 
உனைஅ  லால்எனை  உடையவர்  எவரே. 
6
நீலம்  இட்டகண்  மடவியர்  மயக்கால் 
நெஞ்சம்  ஓர்வழி  நான்ஒரு  வழியாய் 
ஞாலம்  இட்ட  இவ்  வாழ்க்கையில்  அடியேன் 
நடுங்கி  உள்ளகம்  நலியும்என்  தன்மை 
ஆலம்  இட்டருள்  களத்தநீ  அறிந்தும் 
அருள்அ  ளித்திலை  ஆகமற்  றிதனை 
ஓலம்  இட்டழு  தரற்றிஎங்  குரைப்பேன் 
உனைஅ  லால்எனை  உடையவர்  எவரே. 
7
கொடிய  பாவியேன்  படும்பரி  தாபம் 
குறித்துக்  கண்டும்என்  குறைஅகற்  றாது 
நெடிய  காலமும்  தாழ்த்தனை  நினது 
நெஞ்சும்  வஞ்சகம்  நேர்ந்ததுண்  டேயோ 
அடியர்  தந்துயர்  கண்டிடில்  தரியார் 
ஐயர்  என்பர்என்  அளவஃ  திலையோ 
ஒடிய  மாதுயர்  நீக்கிடாய்  என்னில் 
உனைஅ  லால்எனை  உடையவர்  எவரே. 
8
என்என்  றேழையேன்  நாணம்விட்  டுரைப்பேன் 
இறைவ  நின்றனை  இறைப்பொழு  தேனும் 
உன்என்  றால்என  துரைமறுத்  தெதிராய் 
உலக  மாயையில்  திலகமென்  றுரைக்கும் 
மின்என்  றால்இடை  மடவியர்  மயக்கில் 
வீழ்ந்தென்  நெஞ்சகம்  ஆழ்ந்துவிட்  டதனால் 
உன்அன்  பென்பதென்  னிடத்திலை  யேனும் 
உனைஅ  லால்எனை  உடையவர்  எவரே. 
9
அடிய  னேன்மிசை  ஆண்டவ  நினக்கோர் 
அன்பி  ருந்ததென்  றகங்கரித்  திருந்தேன் 
கொடிய  னேன்படும்  இடர்முழு  தறிந்தும் 
கூலி  யாளனைப்  போல்எனை  நினைத்தே 
நெடிய  இத்துணைப்  போதும்ஓர்  சிறிதும் 
நெஞ்சி  ரங்கிலை  சஞ்சலத்  தறிவும் 
ஒடிய  நின்றனன்  என்செய்கேன்  சிவனே 
உனைஅ  லால்எனை  உடையவர்  எவரே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com