
வஞ்சகப் பேதையர் மயக்கில் ஆழ்ந்துழல்
நெஞ்சகப் பாவியேன் நினைந்தி லேன்ஐயோ
வெஞ்சகப் போரினை விட்டு ளோர்புகழ்
தஞ்சகத் தணிகைவாழ் தரும வானையே.
வான்நிகர் கூந்தலார் வன்க ணால்மிக
மால்நிகழ் பேதையேன் மதித்தி லேன் ஐயோ
தான்இரும் புகழ்கொளும் தணிகை மேல்அருள்
தேன்இருந் தொழுகிய செங்க ரும்பையே.
கருங்கடு நிகர்நெடுங் கண்ணி னார்மயல்
ஒருங்குறு மனத்தினேன் உன்னி லேன்ஐயோ
தரும்புகழ் மிகுந்திடுந் தணிகை மாமலை
மருங்கமர்ந் தன்பருள் மன்னும் வாழ்வையே.
வைவளர் வாட்கணார் மயக்கில் வீழ்ந்தறாப்
பொய்வளர் நெஞ்சினேன் போற்றி லேன்ஐயோ
மெய்வளர் அன்பர்கள் மேவி ஏத்துறும்
செய்வளர் தணிகையில் செழிக்கும் தேனையே.
செழிப்படும் மங்கையர் தீய மாயையில்
பழிப்படும் நெஞ்சினேன் பரவி லேன்ஐயோ
வழிப்படும் அன்பர்கள் வறுமை நீக்கியே
பொழிற்படும் தணிகையில் பொதிந்த பொன்னையே.
பொதிதரும் மங்கையர் புளகக் கொங்கைமேல்
வதிதரும் நெஞ்சினேன் மதித்தி லேன்ஐயோ
மதிதரும் அன்பர்தம் மனத்தில் எண்ணிய
கதிதரும் தணிகைவாழ் கற்ப கத்தையே.



