திருவருட்பா  21. திருவடி சூட விழைதல்

தேனார்  அலங்கல்  குழல்மடவார்  திறத்தின்  மயங்காத்  திறல்அடைதற் 
கானார்  கொடிஎம்  பெருமான்தன்  அருட்கண்  மணியே  அற்புதமே 
கானார்  பொழில்சூழ்  திருத்தணிகைக்  கரும்பே  கருணைப்  பெருங்கடலே 
வானார்  அமுதே  நின்திருத்தாள்  அடியேன்  முடிமேல்  வைப்பாயே. 
1
தாழும்  கொடிய  மடவியர்தம்  சழக்கால்  உழலாத்  தகைஅடைந்தே 
ஆழும்  பரமா  னந்தவெள்ளத்  தழுந்திக்  களிக்கும்  படிவாய்ப்ப 
ஊழ்உந்  தியசீர்  அன்பர்மனத்  தொளிரும்  சுடரே  உயர்தணிகை 
வாழும்  பொருளே  நின்திருத்தாள்  அடியேன்  முடிமேல்  வைப்பாயே. 
2
மின்னுண்  மருங்குல்  பேதையர்தம்  வெளிற்று  மயக்குள்  மேவாமே 
உன்னும்  பரம  யோகியர்தம்  உடனே  மருவி  உனைப்புகழ்வான் 
பின்னும்  சடைஎம்  பெருமாற்கோர்  பேறே  தணிகைப்  பிறங்கலின்மேல் 
மன்னும்  சுடரே  நின்திருத்தாள்  அடியேன்  முடிமேல்  வைப்பாயே. 
3
ஆறாத்  துயரம்  தருங்கொடியார்க்  காளாய்  உழன்றிங்  கலையாதே 
கூறாப்  பெருமை  நின்அடியார்  கூட்டத்  துடன்போய்க்  குலாவும்வண்ணம் 
தேறாப்  பொருளாம்  சிவத்தொழுகும்  தேனே  தணிகைத்  திருமலைவாழ் 
மாறாச்  சுகமே  நின்திருத்தாள்  அடியேன்  முடிமேல்  வைப்பாயே. 
4
விரதம்  அழிக்கும்  கொடியார்தம்  விழியால்  மெலியா  துனைப்புகழும் 
சரதர்  அவையில்  சென்றுநின்சீர்  தனையே  வழுத்தும்  தகைஅடைவான் 
பரதம்  மயில்மேல்  செயும்தணிகைப்  பரனே  வெள்ளிப்  பருப்பதம்வாழ் 
வரதன்  மகனே  நின்திருத்தாள்  அடியேன்  முடிமேல்  வைப்பாயே. 
5
வெயில்மேல்  கீடம்  எனமடவார்  வெய்ய  மயற்கண்  வீழாமே. 
அயில்மேல்  கரங்கொள்  நினைப்புகழும்  அடியார்சவையின்  அடையும்வகைக் 
குயில்மேல்  குலவும்  திருத்தணிகைக்  குணப்பொற்  குன்றே  கொள்கலப 
மயில்மேல்  மணியே  நின்திருத்தாள்  அடியேன்  முடிமேல்  வைப்பாயே. 
6
தனமும்  கடந்தே  நாரியர்மால்  தனையும்  கடந்தே  தவம்அழிக்கும் 
சினமும்  கடந்தே  நினைச்சேர்ந்தோர்  தெய்வச்  சபையில்  சேர்ந்திடவே 
வனமும்  கடமும்  திகழ்தணிகை  மலையின்  மருந்தே  வாக்கினொடு 
மனமும்  கடந்தோய்  நின்திருத்தாள்  அடியேன்  முடிமேல்  வைப்பாயே. 
7
கல்லாக்  கொடிய  மடவார்தம்  காமக்  குழிக்கண்  வீழாமே 
நல்லார்க்  கெல்லாம்  நல்லவநின்  நாமம்  துதிக்கும்  நலம்பெறவே 
சொல்லாற்  புனைந்த  மாலையொடும்  தொழுது  தணிகை  தனைத்துதிக்க 
வல்லார்க்  கருளும்  நின்திருத்தாள்  அடியேன்  முடிமேல்  வைப்பாயே. 
8
கள்ளக்  கயற்கண்  மடவார்தம்  காமத்  துழலா  துனைநினைக்கும் 
உள்ளத்  தவர்பால்  சேர்ந்துமகிழ்ந்  துண்மை  உணர்ந்தங்  குற்றிடுவான் 
அள்ளற்  பழனத்  திருத்தணிகை  அரசே  ஞான  அமுதளீக்கும் 
வள்ளற்  பெருமான்  நின்திருத்தாள்  அடியேன்  முடிமேல்  வைப்பாயே. 
9
பாகைப்  பொருவும்  மொழியுடையீர்  என்று  மடவார்ப்  பழிச்சாமல் 
ஓகைப்  பெறும்நின்  திருத்தொண்டர்  உடன்சேர்ந்  துண்மை  யுணர்ந்திடுவான் 
தோகைப்  பரிமேல்  வருந்தெய்வ  சூளா  மணியே  திருத்தணிகை 
வாகைப்  புயனே  நின்திருத்தாள்  அடியேன்  முடிமேல்  வைப்பபாயே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com