திருவருட்பா  17. போக் குரையீடு

கற்கி  லேன்உன  தருட்பெயர்  ஆம்குக  கந்தஎன்  பவைநாளும் 
நிற்கி  லேன்உன  தாகம  நெறிதனில்  நீசனேன்  உய்வேனோ 
சொற்கி  லேசமில்  அடியவர்  அன்பினுள்  தோய்தரு  பசுந்தேனே 
அற்கி  லேர்தரும்  தணிகைஆர்  அழுதமே  ஆனந்த  அருட்குன்றே. 
1
பாவ  வாழ்க்கையில்  பாவியேன்  செய்திடும்  பண்பிலாப்  பிழைநோக்கித் 
தேவ  ரீர்மன  திரக்கமுற்  றேஅருள்  செய்திடா  திருப்பீரேல் 
காவ  லாகிய  கடும்பிணித்  துயரம்இக்  கடையனேன்  தனக்கின்னும் 
யாவ  தாகுமோ  என்செய்கோ  என்செய்கோ  இயலும்வேல்  கரத்தீரே. 
2
சேவி  யாதஎன்  பிழைகளை  என்னுளே  சிறிதறி  தரும்போதோ 
பாவி  யேன்மனம்  பகீலென  வெதும்பியுள்  பதைத்திடக்  காண்கின்றேன் 
ஆவி  யேஅருள்  அமுதமே  நின்திரு  வருள்தனக்  கென்னாமோ 
பூவில்  நாயகன்  போற்றிடும்  தணிகையம்  பொருப்பமர்ந்  திடுவாழ்வே. 
3
துன்பி  னால்அகம்  வெதும்பிநைந்  தயர்ந்துநின்  துணைஅடி  மலர்ஏத்தும் 
அன்பி  லாதஇப்  பாவியேன்  செய்பிழை  அனைத்தையும்  பொறுப்பாயேல் 
வன்பி  லாதநின்  அடியவர்  தம்திரு  மனத்தினுக்  கென்னாமோ 
இன்பி  னால்சுரர்  போற்றிடும்  தணிகைவாழ்  இறைவனே  எம்மானே. 
4
என்செய்  கேன்இனும்  திருவருள்  காண்கிலேன்  எடுக்கரும்  துயர்உண்டேன் 
கன்செய்  பேய்மனக்  கடையனேன்  என்னினும்  காப்பதுன்  கடன்அன்றோ 
பொன்செய்  குன்றமே  பூரண  ஞானமே  புராதனப்  பொருள்வைப்பே 
மன்செய்  மாணிக்க  விளக்கமே  தணிகைவாழ்  வள்ளலே  மயிலோனே. 
5
மண்ணில்  நண்ணிய  வஞ்சகர்  பால்கொடு  வயிற்றினால்  அலைப்பட்டேன் 
கண்ணில்  நண்ணரும்  காட்சியே  நின்திருக்  கடைக்கண்ணோக்  கருள்நோக்கி 
எண்ணி  எண்ணிநெஞ்  சழிந்துகண்ணீர்கொளும்  ஏழையேன்  தனக்கின்னும் 
புண்ணில்  நண்ணிய  வேல்எனத்  துயர்உறில்  புலையன்என்  செய்கேனே. 
6
மலங்கி  வஞ்சகர்  மாட்டிரந்  தையகோ  வருந்திநெஞ்  சயர்வுற்றே 
கலங்கி  நின்திருக்  கருணையை  விழையும்என்  கண்அருள்  செய்யாயோ 
இலங்கி  எங்கணும்  நிறைந்தருள்  இன்பமே  எந்தையே  எந்தாயே 
நலங்கி  ளர்ந்திடும்  தணிகையம்  பதியமர்  நாயக  மணிக்குன்றே. 
7
சைவ  நாயக  சம்பந்தன்  ஆகிய  தமிழ்அருட்  குன்றேஎன் 
தெய்வ  மேநினை  அன்றிஓர்  துணையிலேன்  திருவருள்  அறியாதோ 
வைவ  தேகொளும்  வஞ்சகர்  தம்இடை  வருந்திநெஞ்  சழிகின்றேன் 
செய்வ  தோர்கிலேன்  கைவிடில்  என்செய்கேன்  தெளிவிலாச்  சிறியேனே. 
8
வாழ்வில்  ஆம்சிறு  களிப்பினால்  உன்றனை  மறந்திறு  மாக்கின்றேன் 
தாழ்வி  லேசிறி  தெண்ணிநொந்  தயர்வன்என்  தன்மைநன்  றருளாளா 
கேழ்வி  மேவிய  அடியவர்  மகிழ்வுறக்  கிடைத்தருள்  பெருவாழ்வே 
வேழ்வி  ஓங்கிய  தணிகைமா  மலைதனில்  விளங்கிவீற்  றிருப்போனே. 
9
என்றும்  மாதர்மேல்  இச்சைவைத்  துன்றனை  எண்ணுவேன்  துயருற்றால் 
கன்று  நெஞ்சகக்  கள்வனேன்  அன்பினைக்  கருத்திடை  எணில்சால 
நன்று  நன்றெனக்  கெவ்வணம்  பொன்அருள்  நல்குவை  அறிகில்லேன் 
துன்று  மாதவர்  போற்றிடும்  தணிகைவாழ்  சோதியே  சுகவாழ்வே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com