திருவருட்பா  15. வேட்கை விண்ணப்பம்

மன்னே  என்றன்  உயிர்க்குயிரே  மணியே  தணிகை  மலைமருந்தே 
அன்னே  என்னை  ஆட்கொண்ட  அரசே  தணிகை  ஐயாவே 
பொன்னே  ஞானப்  பொங்கொளியே  புனித  அருளே  பூரணமே 
என்னே  எளியேன்  துயர்உழத்தல்  எண்ணி  இரங்கா  திருப்பதுவே. 
1
இரங்கா  நின்றிங்  கலைதரும்இவ்  வெளியேன்  கனவின்  இடத்தேனும் 
அரங்கா  அரவின்  நடித்தோனும்  அயனும்  காண்டற்  கரிதாய 
உரங்கா  முறும்மா  மயில்மேல்நின்  உருவம்  தரிசித்  துவப்படையும் 
வரங்கா  தலித்தேன்  தணிகைமலை  வாழ்வே  இன்று  வருவாயோ. 
2
வருவாய்  என்று  நாள்தோறும்  வழிபார்த்  திரங்கி  மனந்தளர்ந்தேன் 
கருவாய்  பவன்என்  றெனைத்தள்ளக்  கருது  வாயோ  அன்றிஅருள் 
உருவாய்  வந்து  தருவாயோ  தணிகா  சலத்துள்  உற்றமர்ந்த 
ஒருவர்  உன்றன்  திருவுளத்தை  உணரேன்  என்செய்  துய்கேனே. 
3
உய்யும்  பொருட்டுன்  திருப்புகழை  உரையேன்  அந்தோ  உரைக்கடங்காப் 
பொய்யும்  களவும்  அழுக்காறும்  பொருளாக்  கொண்டேன்  புலையேனை 
எய்யும்  படிவந்  தடர்ந்தியமன்  இழுத்துப்  பறிக்கில்  என்னேயான் 
செய்யும்  வகைஒன்  றறியேனே  தென்பால்  தணிகைச்  செஞ்சுடரே. 
4
செஞ்சொல்  சுவையே  மெய்ஞ்ஞானச்  செல்வப்  பெருக்கே  தெள்ளமுதே 
விஞ்சைப்  புலவர்  புகழ்தணிகை  விளக்கே  துளக்கில்  வேலோனே 
வெஞ்சொல்  புகலும்  வஞ்சகர்பால்  மேவி  நின்தாள்  மலர்மறந்தே 
பஞ்சில்  தமியேன்  படும்பாட்டைப்  பார்த்தும்  அருட்கண்  பார்த்திலையே. 
5
பார்க்கின்  றிலையே  பன்னிருகண்  படைத்தும்  எளியேன்  பாடனைத்தும் 
தீர்க்கின்  றிலையே  என்னேயான்  செய்வேன்  சிறியேன்  சீமானே 
போர்க்குன்  றொடுசூர்  புயக்குன்றும்  பொடிசெய்  வேற்கைப்  புண்ணியனே 
சீர்க்குன்  றெனும்நல்  வளத்தணிகைத்  தேவே  மயில்ஊர்  சேவகனே. 
6
சேவற்  கொடிகொள்  குணக்குன்றே  சிந்தா  மணியே  யாவர்கட்கும் 
காவற்  பதியே  தணிகைவளர்  கரும்பே  கனியே  கற்பகமே 
மூவர்க்  கிறையே  வேய்ஈன்ற  முத்தன்  அளித்த  முத்தேநல் 
தேவர்க்  கருள்நின்  சேவடிக்கே  விழைந்தேன்  யாதும்தெரியேனே. 
7
தெரியேன்  உனது  திருப்புகழைத்  தேவே  உன்றன்  சேவடிக்கே 
பரியேன்  பணியேன்  கூத்தாடேன்  பாடேன்  புகழைப்  பரவசமாய்த் 
தரியேன்  தணிகை  தனைக்காணேன்  சாகேன்  நோகேன்  கும்பிக்கே 
உரியேன்  அந்தோ  எதுகொண்டிங்  குய்கேன்  யாதுசெய்கேனே. 
8
செய்வ  துனது  திருவடிக்காம்  திறனே  சிந்தை  நின்பாலே 
வைவ  துன்னை  நினையாத  வஞ்ச  கரையே  வழுத்திநிதம் 
உய்வ  துனது  திருநாமம்  ஒன்றைப்  பிடித்தே  மற்றொன்றால் 
எய்வ  தறியேன்  திருத்தணிகை  எந்தாய்  எந்தாய்  எளியேனே. 
9
எளியேன்  நினது  சேவடியாம்  இன்ப  நறவை  எண்ணிஎண்ணி 
அளியேன்  நெஞ்சம்  சற்றேனும்  அன்பொன்  றில்லேன்  அதுசிறிதும் 
ஒளியேன்  எந்தாய்  என்உள்ளத்  தொளித்தே  எவையும்  உணர்கின்றாய் 
வளியே  முதலாய்  நின்றருளும்  மணியே  தணிகை  வாழ்மன்னே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com