திருவருட்பா  11. ஆளுடைய நம்பிகள் அருண்மாலை

மதியணிசெஞ்  சடைக்கனியை  மன்றுள்நடம்  புரிமருந்தைத் 
துதியணிசெஞ்  சுவைப்பொருளில்  சொன்மாலை  தொடுத்தருளி 
விதியணிமா  மறைநெறியும்  மெய்ந்நிலைஆ  கமநெறியும் 
வதியணிந்து  விளங்கவைத்த  வன்தொண்டப்  பெருந்தகையே. 
1
நீற்றிலிட்ட  நிலையாப்புன்  னெறியுடையார்  தமைக்கூடிச் 
சேற்றிலிட்ட  கம்பமெனத்  தியங்குற்றேன்  தனைஆளாய் 
ஏற்றலிட்ட  திருவடியை  எண்ணிஅரும்  பொன்னையெலாம் 
ஆற்றில்இட்டுக்  குளத்தெடுத்த  அருட்டலைமைப்  பெருந்தகையே. 
2
இலைக்குளநீ  ரழைத்தனில்  இடங்கர்உற  அழைத்ததன்வாய்த் 
தலைக்குதலை  மதலைஉயிர்  தழைப்பஅழைத்  தருளியநின் 
கலைக்கும்வட  கலையின்முதற்  கலைக்கும்உறு  கணக்குயர்பொன் 
மலைக்கும்அணு  நிலைக்கும்உறா  வன்தொண்டப்  பெருந்தகையே. 
3
வேதமுதற்  கலைகளெலாம்  விரைந்துவிரைந்  தனந்தமுறை 
ஓதஅவைக்  கணுத்துணையும்  உணர்வரிதாம்  எம்பெருமான் 
பாதமலர்  நினதுதிருப்  பணிமுடிமேற்  படப்புரிந்த 
மாதவம்யா  துரைத்தருளாய்  வன்தொண்டப்  பெருந்தகையே. 
4
ஏழிசையாய்  இசைப்பயனாய்  இன்னமுதாய்  என்னுடைய 
தோழனுமாய்  என்றுமுன்நீ  சொன்னபெருஞ்  சொற்பொருளை 
ஆழ்நினைத்  திடில்அடியேன்  அருங்கரணம்  கரைந்துகரைந் 
தூழியல்இன்  புறுவதுகாண்  உயர்கருணைப்  பெருந்தனையே. 
5
வான்காண  இந்திரனும்  மாலையனும்  மாதவரும் 
தான்காண  இறைஅருளால்  தனித்தவள  யானையின்மேல் 
கோன்காண  எழுந்தருளிக்  குலவியநின்  கோலமதை 
நான்காணப்  பெற்றிலனே  நாவலூர்ப்  பெருந்தகையே. 
6
தேன்படிக்கும்  அமுதாம்உன்  திருப்பாட்டைத்  தினந்தோறும் 
நான்படிக்கும்  போதென்னை  நானறியேன்  நாஒன்றோ 
ஊன்படிக்கும்  உளம்படிக்கும்  உயிர்படிக்கும்  உயிர்க்குயிரும் 
தான்படிக்கும்  அனுபவங்காண்  தனிக்கருணைப்  பெருந்தனையே. 
7
இன்பாட்டுத்  தொழிற்பொதுவில்  இயற்றுகின்ற  எம்பெருமான் 
உன்பாட்டுக்  குவப்புறல்போல்  ஊர்பாட்டுக்  குவந்திலர்என் 
றென்பாட்டுக்  கிசைப்பினும்என்  இடும்பாட்டுக்  கரணமெலாம் 
அன்பாட்டுக்  கிசைவதுகாண்  அருட்பாட்டுப்  பெருந்தகையே. 
8
பரம்பரமாம்  துரியமெனும்  பதத்திருந்த  பரம்பொருளை 
உரம்பெறத்தோ  ழமைகொண்ட  உன்பெருமை  தனைமதித்து 
வரம்பெறநற்  றெய்வமெலாம்  வந்திக்கும்  என்றால்என் 
தரம்பெறஎன்  புகல்வேன்நான்  தனித்தலைமைப்  பெருந்தகையே. 
9
பேரூரும்  பரவைமனப்  பிணக்கறஎம்  பெருமானை 
ஊரூரும்  பலபுகல  ஓரிரவில்  தூதன்என்த 
தேரூரும்  திருவாரூர்த்  தெருவுதொறும்  நடப்பித்தாய் 
ஆரூர  நின்பெருமை  அயன்மாலும்  அளப்பரிதே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com