
மதியணிசெஞ் சடைக்கனியை மன்றுள்நடம் புரிமருந்தைத்
துதியணிசெஞ் சுவைப்பொருளில் சொன்மாலை தொடுத்தருளி
விதியணிமா மறைநெறியும் மெய்ந்நிலைஆ கமநெறியும்
வதியணிந்து விளங்கவைத்த வன்தொண்டப் பெருந்தகையே.
நீற்றிலிட்ட நிலையாப்புன் னெறியுடையார் தமைக்கூடிச்
சேற்றிலிட்ட கம்பமெனத் தியங்குற்றேன் தனைஆளாய்
ஏற்றலிட்ட திருவடியை எண்ணிஅரும் பொன்னையெலாம்
ஆற்றில்இட்டுக் குளத்தெடுத்த அருட்டலைமைப் பெருந்தகையே.
இலைக்குளநீ ரழைத்தனில் இடங்கர்உற அழைத்ததன்வாய்த்
தலைக்குதலை மதலைஉயிர் தழைப்பஅழைத் தருளியநின்
கலைக்கும்வட கலையின்முதற் கலைக்கும்உறு கணக்குயர்பொன்
மலைக்கும்அணு நிலைக்கும்உறா வன்தொண்டப் பெருந்தகையே.
வேதமுதற் கலைகளெலாம் விரைந்துவிரைந் தனந்தமுறை
ஓதஅவைக் கணுத்துணையும் உணர்வரிதாம் எம்பெருமான்
பாதமலர் நினதுதிருப் பணிமுடிமேற் படப்புரிந்த
மாதவம்யா துரைத்தருளாய் வன்தொண்டப் பெருந்தகையே.
ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை
ஆழ்நினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்
தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தனையே.
வான்காண இந்திரனும் மாலையனும் மாதவரும்
தான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல்
கோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை
நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே.
தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தனையே.
இன்பாட்டுத் தொழிற்பொதுவில் இயற்றுகின்ற எம்பெருமான்
உன்பாட்டுக் குவப்புறல்போல் ஊர்பாட்டுக் குவந்திலர்என்
றென்பாட்டுக் கிசைப்பினும்என் இடும்பாட்டுக் கரணமெலாம்
அன்பாட்டுக் கிசைவதுகாண் அருட்பாட்டுப் பெருந்தகையே.
பரம்பரமாம் துரியமெனும் பதத்திருந்த பரம்பொருளை
உரம்பெறத்தோ ழமைகொண்ட உன்பெருமை தனைமதித்து
வரம்பெறநற் றெய்வமெலாம் வந்திக்கும் என்றால்என்
தரம்பெறஎன் புகல்வேன்நான் தனித்தலைமைப் பெருந்தகையே.
பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை
ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்என்த
தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்
ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே.



