திருவருட்பா  87. சரணப் பதிகம்

மதிவார்  சடைமா  மணியே  அருள்வள்  ளலேநன் 
நிதியே  திருஅம்  பலத்தா  டல்செய்நித்  தனேநின் 
துதியேன்  எனினும்  உனைஅன்  றித்துணையி  லேன்என் 
பதியே  எனதெண்  ணம்ப  லிக்கும்படிக்  கருளே. 
1
படிமேல்  அடியேன்  உனைஅன்  றிஓர்பற்றி  லேன்என் 
முடிமேல்  அடிவைத்  தருள்செய்  திடமுன்னு  கண்டாய் 
கொடிமேல்  விடைநாட்  டியஎண்கு  ணக்குன்  றமே 
பொடிமேல்  விளங்குந்  திருமே  னிஎம்புண்  ணியனே. 
2
புண்ணாம்  மனம்சஞ்  சலித்துள்  ளம்புலர்ந்து  நின்றேன் 
அண்ணா  எனைஆட்  கொளவேண்  டும்அகற்று  வாயேல் 
கண்ணார்  களைகண்  பிறிதொன்  றிலைகள்ள  னேனை 
எண்ணா  வினைஎன்  செயுமோ  இதற்கென்செய்  வேனே. 
3
செய்வேன்  அவம்அன்  றித்தவம்  ஒன்றும்செய்  தறியேன் 
நைவேன்  பிழையா  வும்பொறுத்  தருள்நல்கு  வாயேல் 
உய்வேன்  அலதுய்  வகைஇன்  றுமன்றோங்கு  கின்றாய் 
வைவேன்  துதிப்பேன்  உனைஎன்  றும்மறந்தி  லேனே. 
4
மறவா  துனைவாழ்த்  துமெய்அன்  பரைமாநி  லத்தே 
இறவா  வகைஆட்  கொண்டரு  ளியஈச  னேமெய் 
உறவா  கியநின்  பதம்அன்  றிஒன்  றோர்கி  லேன்நான் 
பிறவா  நெறிதந்  தருள்என்  பதென்  பேசி  டாயே. 
5
என்னே  இனும்நின்  அருள்எய்  திலன்ஏழை  யேனை 
முன்னே  வலிந்தாட்  கொண்டதின்  றுமுனிந்த  தேயோ 
பொன்னேர்  அணிஅம்  பலத்தா  டியபுண்ணி  யாஎன் 
அன்னே  அரசே  அமுதே  அருள்ஆண்ட  வனே. 
6
ஆண்டாய்  எனைஏழ்  பிறப்பும்  உனைஅன்றி  ஒன்றும் 
தீண்டா  தெனதுள்  ளம்என்றால்  என்சிறுமை  தீர்க்க 
வேண்டா  தயலார்  எனக்காண்  பதென்மெய்ய  னேபொன் 
ஆண்டான்  திருஎய்  தநஞ்சைக்  களம்நாட்டி  னோயே. 
7
நாட்டார்  நகைசெய்  வர்என்றோ  அருள்நல்கி  லாய்நீ 
வீட்டார்  நினைஎன்  னினைப்பார்  எனைமேவி  லாயேல் 
தாட்டா  மரைஅன்  றித்துணை  ஒன்றும்சார்ந்  திலேன்என் 
மாட்டா  மைஅறிந்  தருள்வாய்  மணிமன்று  ளானே. 
8
மன்றா  டியமா  மணியே  தனிவான  வாஓர் 
மின்றாழ்  சடைவே  தியனே  நினைவேண்டு  கின்றேன் 
பொன்றா  தமெய்அன்  பருக்கன்  புளம்பூண்டு  நின்று 
நன்றாய்  இரவும்  பகலும்  உனைநாடு  மாறே. 
9
மாறா  மனமா  யையினால்  மதிமாழ்கி  மாழ்கி 
ஏறா  மல்இறங்  குகின்றேன்  இதற்கென்  செய்வேன் 
தேறா  வுளத்தேன்  றனைஏ  றிடச்செய்தி  கண்டாய் 
பேறா  மணிஅம்  பலமே  வியபெற்றி  யானே. 
10
ஆனே  றிவந்தன்  பரைஆட்  கொளும்ஐய  னேஎம் 
மானே  மணிமன்  றில்நடம்  புரிவள்ள  லேசெந் 
தேனே  அமுதே  முதலா  கியதெய்வ  மேநீ 
தானே  எனைஆண்  டருள்வாய்  நின்சரண்  சரணே. 
11

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com