திருவருட்பா  84. கருணை விண்ணப்பம்

நல்லார்க்  கெல்லாம்  நல்லவன்நீ  ஒருவன்  யாண்டும்  நாயடியேன் 
பொல்லார்க்  கெல்லாம்  பொல்லவன்நான்  ஒருவன்  இந்தப்  புணர்ப்பதனால் 
எல்லாம்  உடையாய்  நினக்கெதிரென்  றெண்ணேல்  உறவென்  றெண்ணுகஈ 
தல்லால்  வழக்கென்  இருமைக்கும்  பொதுமை  அன்றோ  அருளிடமே. 
1
இடமே  பொருளே  ஏவலே  என்றென்  றெண்ணி  இடர்ப்படுமோர் 
மடமே  உடையேன்  தனக்கருள்நீ  வழங்கல்  அழகோ  ஆநந்த 
நடமே  உடையோய்  நினைஅன்றி  வேற்றுத்  தெய்வம்  நயவேற்குத் 
திடமே  அருள்தான்  வழங்காது  தீர்த்தல்  அழகோ  தெரிப்பாயே. 
2
தெரித்தால்  அன்றிச்  சிறிதேனும்  தெரிவொன்  றில்லாச்  சிறியேனைப் 
பிரித்தாய்  கூடும்  வகைஅறியும்  பெற்றி  என்னே  பிறைமுடிமேல் 
தரித்தாய்  அடியேன்  பிழைபொறுக்கத்  தகுங்காண்  துன்பம்  தமியேனை 
அரித்தால்  கண்டிங்  கிரங்காமை  அந்தோ  அருளுக்  கழகேயோ. 
3
அருள்ஓர்  சிறிதும்  உதவுகிலாய்  அதனைப்  பெறுதற்  கடியேன்பால் 
தெருள்ஓர்  சிறிதும்  இலையேஎன்  செய்கேன்  எங்கள்  சிவனேயோ 
மருளோர்  எனினும்  தமைநோக்கி  வந்தார்க்  களித்தல்  வழக்கன்றோ 
பொருளோர்  இடத்தே  மிடிகொண்டோர்  புகுதல்  இன்று  புதிதன்றே. 
4
புதியேன்  அல்லேன்  நின்அடிமைப்  பொருத்தம்  இல்லேன்  அல்லேன்யான் 
மதியேன்  வேற்றுத்  தேவர்தமை  வந்தங்  கவர்தாம்  எதிர்ப்படினும் 
துதியேன்  நின்னை  விடுவேனோ  தொண்ட  னேனை  விடல்அழகோ 
நதியேர்  சடையோய்  இன்னருள்நீ  நல்கல்  வேண்டும்  நாயேற்கே. 
5
நாயேன்  துன்பக்  கடல்வீழ்ந்து  நலிதல்  அழகோ  நல்லோர்க்கிங் 
கீயேன்  ஒன்றும்  இல்லேன்நான்  என்செய்  கேனோ  என்னுடைய 
தாயே  அனையாய்  சிறிதென்மேல்  தயவு  புரிந்தால்  ஆகாதோ 
சேயேன்  தன்னை  விடுப்பாயோ  விடுத்தால்  உலகஞ்  சிரியாதோ. 
6
சிரிப்பார்  நின்பேர்  அருள்பெற்றோர்  சிவனே  சிவனே  சிவனேயோ 
விரிப்பார்  பழிச்சொல்  அன்றிஎனை  விட்டால்  வெள்ளை  விடையோனே 
தரிப்பாய்  இவனை  அருளிடத்தே  என்று  நின்று  தகும்வண்ணம் 
தெரிப்பார்  நினக்கும்  எவர்கண்டாய்  தேவர்  தேடற்  கரியானே. 
7
அரிய  பெருமான்  எளியோமை  ஆளும்  பெருமான்  யாவர்கட்கும் 
பெரிய  பெருமான்  சிவபெருமான்  பித்தப்  பெருமான்  என்றுன்னை 
உரிய  பெருமா  தவர்பழிச்சல்  உண்மை  எனில்என்  உடையானே 
கரிய  பெருமால்  உடையேற்கும்  அருளல்  உன்றன்  கடன்அன்றே. 
8
அன்றும்  சிறியேன்  அறிவறியேன்  அதுநீ  அறிந்தும்  அருள்செய்தாய் 
இன்றும்  சிறியேன்  அறிவறியேன்  இதுநீ  அறிந்தும்  அருளாயேல் 
என்றும்  ஒருதன்  மையன்எங்கள்  இறைவன்  எனமா  மறைகள்எலாம் 
தொன்று  மொழிந்த  தூமொழிதான்  சூது  மொழியோ  சொல்லாயே. 
9
சொல்லற்  கரிய  பெரியபரஞ்  சுடரே  முக்கட்  சுடர்க்கொழுந்தே 
மல்லற்  கருமால்  அயன்முதலோர்  வழுத்தும்  பெருஞ்சீர்  மணிக்குன்றே 
புல்லற்  கரிதாம்  எளியேன்றன்  பிழைகள்  யாவும்  பொறுத்திந்த 
அல்லற்  கடல்நின்  றெனைஎடுத்தே  அருள்வாய்  உன்றன்  அருள்நலமே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com