
நல்லார்க் கெல்லாம் நல்லவன்நீ ஒருவன் யாண்டும் நாயடியேன்
பொல்லார்க் கெல்லாம் பொல்லவன்நான் ஒருவன் இந்தப் புணர்ப்பதனால்
எல்லாம் உடையாய் நினக்கெதிரென் றெண்ணேல் உறவென் றெண்ணுகஈ
தல்லால் வழக்கென் இருமைக்கும் பொதுமை அன்றோ அருளிடமே.
இடமே பொருளே ஏவலே என்றென் றெண்ணி இடர்ப்படுமோர்
மடமே உடையேன் தனக்கருள்நீ வழங்கல் அழகோ ஆநந்த
நடமே உடையோய் நினைஅன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத்
திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே.
தெரித்தால் அன்றிச் சிறிதேனும் தெரிவொன் றில்லாச் சிறியேனைப்
பிரித்தாய் கூடும் வகைஅறியும் பெற்றி என்னே பிறைமுடிமேல்
தரித்தாய் அடியேன் பிழைபொறுக்கத் தகுங்காண் துன்பம் தமியேனை
அரித்தால் கண்டிங் கிரங்காமை அந்தோ அருளுக் கழகேயோ.
அருள்ஓர் சிறிதும் உதவுகிலாய் அதனைப் பெறுதற் கடியேன்பால்
தெருள்ஓர் சிறிதும் இலையேஎன் செய்கேன் எங்கள் சிவனேயோ
மருளோர் எனினும் தமைநோக்கி வந்தார்க் களித்தல் வழக்கன்றோ
பொருளோர் இடத்தே மிடிகொண்டோர் புகுதல் இன்று புதிதன்றே.
புதியேன் அல்லேன் நின்அடிமைப் பொருத்தம் இல்லேன் அல்லேன்யான்
மதியேன் வேற்றுத் தேவர்தமை வந்தங் கவர்தாம் எதிர்ப்படினும்
துதியேன் நின்னை விடுவேனோ தொண்ட னேனை விடல்அழகோ
நதியேர் சடையோய் இன்னருள்நீ நல்கல் வேண்டும் நாயேற்கே.
நாயேன் துன்பக் கடல்வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கிங்
கீயேன் ஒன்றும் இல்லேன்நான் என்செய் கேனோ என்னுடைய
தாயே அனையாய் சிறிதென்மேல் தயவு புரிந்தால் ஆகாதோ
சேயேன் தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகஞ் சிரியாதோ.
சிரிப்பார் நின்பேர் அருள்பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ
விரிப்பார் பழிச்சொல் அன்றிஎனை விட்டால் வெள்ளை விடையோனே
தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும்வண்ணம்
தெரிப்பார் நினக்கும் எவர்கண்டாய் தேவர் தேடற் கரியானே.
அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும்
பெரிய பெருமான் சிவபெருமான் பித்தப் பெருமான் என்றுன்னை
உரிய பெருமா தவர்பழிச்சல் உண்மை எனில்என் உடையானே
கரிய பெருமால் உடையேற்கும் அருளல் உன்றன் கடன்அன்றே.
அன்றும் சிறியேன் அறிவறியேன் அதுநீ அறிந்தும் அருள்செய்தாய்
இன்றும் சிறியேன் அறிவறியேன் இதுநீ அறிந்தும் அருளாயேல்
என்றும் ஒருதன் மையன்எங்கள் இறைவன் எனமா மறைகள்எலாம்
தொன்று மொழிந்த தூமொழிதான் சூது மொழியோ சொல்லாயே.
சொல்லற் கரிய பெரியபரஞ் சுடரே முக்கட் சுடர்க்கொழுந்தே
மல்லற் கருமால் அயன்முதலோர் வழுத்தும் பெருஞ்சீர் மணிக்குன்றே
புல்லற் கரிதாம் எளியேன்றன் பிழைகள் யாவும் பொறுத்திந்த
அல்லற் கடல்நின் றெனைஎடுத்தே அருள்வாய் உன்றன் அருள்நலமே.



