திருவருட்பா · 100பேறடைவு

மணம்புரி கடிகை இரண்டரை எனும்ஓர்
வரையுள தாதலால் மகனே
எணம்புரிந் துழலேல் சவுளம்ஆ தியசெய்
தெழில்உறு மங்கலம் புனைந்தே
குணம்புரிந் தெமது மகன்எனும் குறிப்பைக்
கோலத்தால் காட்டுக எனவே
வணம்புரி மணிமா மன்றில்என் தந்தை
வாய்மலர்ந் தருளினர் மகிழ்ந்தே.
1
எம்பொருள் எனும்என் அன்புடை மகனே
இரண்டரைக் கடிகையில் உனக்கே
அம்புவி வானம் அறியமெய் அருளாம்
அனங்கனை தனைமணம் புரிவித்
தும்பரும் வியப்ப உயர்நிலை தருதும்
உண்மைஈ தாதலால் உலகில்
வெம்புறு துயர்தீர்ந் தணிந்துகொள் என்றார்
மெய்ப்பொது நடத்திறை யவரே.
2
அன்புடை மகனே மெய்யருள் திருவை
அண்டர்கள் வியப்புற நினக்கே
இன்புடை உரிமை மணம்புரி விப்பாம்
இரண்டரைக் கடிகையில் விரைந்தே
துன்புடை யவைகள் முழுவதும் தவிர்ந்தே
தூய்மைசேர் நன்மணக் கோலம்
பொன்புடை விளங்கப் புனைந்துகொள் என்றார்
பொதுநடம் புரிகின்றார் தாமே.
3
ஈதுகேள் மகனே மெய்யருள் திருவை
இரண்டரைக் கடிகையில் நினக்கே
ஊதியம் பெறவே மணம்புரி விப்பாம்
உண்மைஈ தாதலால் இனிவீண்
போதுபோக் காமல் மங்கலக் கோலம்
புனைந்துளம் மகிழ்கநீ என்றார்
தீதுதீர்த் தென்னை இளந்தையில் தானே
தெருட்டிய சிற்சபை யவரே.
4
விரைந்துகேள் மகனே உலகெலாம் களிக்க
மெய்யருள் திருவினை நினக்கே
வரைந்துநன் மணஞ்செய் தொருபெரு நிலையில்
வைத்துவாழ் விக்கின்றோம் அதனால்
இரைந்துளம் கவலேல் இரண்டரைக் கடிகை
எல்லையுள் எழில்மணக் கோலம்
நிரைந்துறப் புனைதி என்றுவாய் மலர்ந்தார்
நிருத்தஞ்செய் ஒருத்தர்உள் உவந்தே.
5
களிப்பொடு மகனே அருள்ஒளித் திருவைக்
கடிகைஓர் இரண்டரை அதனில்
ஒளிப்பிலா துலகம் முழுவதும் அறிய
உனக்குநன் மணம்புரி விப்பாம்
அளிப்புறு மகிழ்வால் மங்கலக் கோலம்
அணிபெறப் புனைகநீ விரைந்தே
வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில்
விளங்குமெய்ப் பொருள்இறை யவரே.
6
கலங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவைக்
களிப்பொடு மணம்புரி விப்பாம்
விலங்கிடேல் வீணில் போதுபோக் காமல்
விரைந்துநன் மங்கலக் கோலம்
நலங்கொளப் புனைந்து மகிழ்கஇவ் வுலகர்
நவிலும்அவ் வுலகவர் பிறரும்
இலங்கநின் மணமே ஏத்துவர் என்றார்
இயலுறு சிற்சபை யவரே.
7
ஐயுறேல் இதுநம் ஆணைநம் மகனே
அருள்ஒளித் திருவைநின் தனக்கே
மெய்யுறு மகிழ்வால் மணம்புரி விப்பாம்
விரைந்திரண் டரைக்கடி கையிலே
கையற வனைத்தும் தவிர்ந்துநீ மிகவும்
களிப்பொடு மங்கலக் கோலம்
வையமும் வானும் புகழ்ந்திடப் புனைக
என்றனர் மன்றிறை யவரே.
8
தூங்கலை மகனே எழுகநீ விரைந்தே
தூயநீர் ஆடுக துணிந்தே
பாங்குற ஓங்கு மங்கலக் கோலம்
பண்பொடு புனைந்துகொள் கடிகை
ஈங்கிரண் டரையில் அருள்ஒளித் திருவை
எழில்உற மணம்புரி விப்பாம்
ஏங்கலை இதுநம் ஆணைகாண் என்றார்
இயன்மணி மன்றிறை யவரே.
9
மயங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவை
மணம்புரி விக்கின்றாம் இதுவே
வயங்குநல் தருணக் காலைகாண் நீநன்
மங்கலக் கோலமே விளங்க
இயங்கொளப் புனைதி இரண்டரைக் கடிகை
எல்லையுள் என்றுவாய் மலர்ந்தார்
சயங்கொள எனக்கே தண்ணமு தளித்த
தந்தையார் சிற்சபை யவரே.
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits