திருவருட்பா  19. நெஞ்சொடு புலத்தல்

வாவா  என்ன  அருள்தணிகை  மருந்தை  என்கண்  மாமணியைப் 
பூவாய்  நறவை  மறந்தவநாள்  போக்கின்  றதுவும்  போதாமல் 
மூவா  முதலின்  அருட்கேலா  மூட  நினைவும்  இன்றெண்ணி 
ஆவா  நெஞ்சே  எனைக்கெடுத்தாய்  அந்தோ  நீதான்  ஆவாயோ. 
1
வாயாத்  துரிசற்  றிடும்புலவோர்  வழுத்தும்  தணிகை  மலைஅமுதைக் 
காயாக்  கனியை  மறந்தவநாள்  கழிக்கின்  றதுவும்  போதாமல் 
ஈயாக்  கொடியர்  தமக்கின்றி  ஏலா  நினைவும்  இன்றெண்ணி 
மாயா  என்றன்  வாழ்வழித்தாய்  மனமே  நீதான்  வாழ்வாயோ. 
2
வாழும்  படிநல்  அருள்புரியும்  மருவுந்  தணிகை  மலைத்தேனைச் 
சூழும்  கலப  மயில்அரசைத்  துதியாப்  பவமும்  போதாமல் 
வீழும்  கொடியர்  தமக்கன்றி  மேவா  நினைவும்  மேவிஇன்று 
தாழும்  படிஎன்  தனைஅலைத்தாய்  சவலை  மனம்நீ  சாகாயோ. 
3
காயோம்  எனநின்  றவர்க்கினிய  கனியாம்  தணிகைக்  கற்பகத்தைப் 
போய்ஓர்  கணமும்  போற்றுகிலாய்  புன்மை  புரிந்தாய்  புலங்கெட்டாய் 
பேயோ  எங்கும்  திரிந்தோடிப்  பேணா  என்பைப்  பேணுகின்ற 
நாயோ  மனமே  நீஉனைநான்  நம்பி  வாளா  நலிந்தேனே. 
4
தேனும்  கடமும்  திகழ்தணிகைத்  தேவை  நினையாய்  தீநரகம் 
மானும்  நடையில்  உழல்கின்றாய்  மனமே  உன்றன்  வஞ்சகத்தால் 
நானும்  இழந்தேன்  பெருவாழ்வை  நாய்போல்  அலைந்திங்  கவமேநீ 
தானும்  இழந்தாய்  என்னேஉன்  தன்மை  இழிவாம்  தன்மையதே. 
5
தன்னால்  உலகை  நடத்தும்அருட்  சாமி  தணிகை  சாராமல் 
பொன்னால்  மண்ணால்  பூவையரால்  புலம்பி  வருந்தும்  புல்நெஞ்சே 
உன்னால்  என்றன்  உயர்விழந்தேன்  உற்றார்  இழந்தேன்  உன்செயலைச் 
சொன்னால்  நகைப்பர்  எனைவிட்டும்  தொலையாய்  இங்கு  நிலையாயே. 
6
நிலைக்கும்  தணிகை  என்அரசை  நீயும்  நினையாய்  நினைப்பதையும் 
கலைக்கும்  தொழில்கொண்  டெனைக்கலக்கம்  கண்டாய்  பலன்என்  கண்டாயே 
முலைக்கும்  கலைக்கும்  விழைந்தவமே  முயங்கும்  மூட  முழுநெஞ்சே 
அலைக்கும்  கொடிய  விடம்நீஎன்  றறிந்தேன்  முன்னர்  அறிந்திலனே. 
7
இலதை  நினைப்பாய்  பித்தர்கள்போல்  ஏங்கா  நிற்பாய்  தணிகையில்என் 
குலதெய்  வமுமாய்க்  கோவாய்சற்  குருவாய்  நின்ற  குகன்அருளே 
நலதென்  றறியாய்  யான்செய்த  நன்றி  மறந்தாய்  நாணாதென் 
வலதை  அழித்தாய்  வலதொடுநீ  வாழ்வாய்  கொல்லோ  வல்நெஞ்சே. 
8
நெஞ்சே  உகந்த  துணைஎனக்கு  நீஎன்  றறிந்தே  நேசித்தேன் 
மஞ்சேர்  தணிகை  மலைஅமுதை  வாரிக்  கொளும்போ  தென்னுள்ளே 
நஞ்சே  கலந்தாய்  உன்உறவு  நன்றே  இனிஉன்  நட்பகன்றால் 
உய்ஞ்சேன்  இலையேல்  வன்னரகத்  துள்ளேன்  கொள்ளேன்  ஒன்றையுமே. 
9
கொள்ளும்  பொழில்சூழ்  தணிகைமலைக்  கோவை  நினையா  தெனைநரகில் 
தள்ளும்  படிக்கோ  தலைப்பட்டாய்  சகத்தின்  மடவார்  தம்மயலாம் 
கள்ளுண்  டந்தோ  வெறிகொண்டாய்  கலைத்தாய்  என்னைக்  கடந்தோர்கள் 
எள்ளும்  படிவந்  தலைக்கின்றாய்  எனக்கென்  றெங்கே  இருந்தாயோ. 
10
இருந்தாய்  இங்கு  கண்டவிடத்  தேகா  நின்றாய்  அவ்விடத்தும் 
பொருந்தாய்  மீண்டும்  புகுவாய்பின்  போவாய்  வருவாய்  புகழ்த்தணிகை 
மருந்தாய்  நின்ற  குகன்அடியை  வழுத்தாய்  எனையும்  வலிக்கின்றாய் 
திருந்தாய்  நெஞ்சே  நின்செயலைச்  செப்ப  எனக்குத்  திடுக்கிடுமே. 
11

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com