திருவருட்பா  13. மருண்மாலை விண்ணப்பம்

சொல்லும்  பொருளு  மாய்நிறைந்த  சுகமே  அன்பர்  துதிதுணையே 
புல்லும்  புகழ்சேர்  நல்தணிகைப்  பொருப்பின்  மருந்தே  பூரணமே 
அல்லும்  பகலும்  நின்நாமம்  அந்தோ  நினைந்துன்  ஆளாகேன் 
கல்லும்  பொருவா  வன்மனத்தால்  கலங்கா  நின்றேன்  கடையேனே. 
1
கடையேன்  வஞ்ச  நெஞ்சகத்தால்  கலுழ்கின்  றேன்நின்  திருக்கருணை 
அடையேன்  அவமே  திரிகின்றேன்  அந்தோ  சிறிதும்  அறிவில்லேன் 
விடையே  றீசன்  புயம்படும்உன்  விரைத்தாள்  கமலம்  பெறுவேனோ 
கொடைஏர்  அருளைத்  தருமுகிலே  கோவே  தணிகைக்  குலமணியே. 
2
மணியே  அடியேன்  கண்மணியே  மருந்தே  அன்பர்  மகிழ்ந்தணியும் 
அணியே  தணிகை  அரசேதெள்  அமுதே  என்றன்  ஆருயிரே 
பிணிஏய்  துயரால்  வருந்திமனப்  பேயால்  அலைந்து  பிறழ்கின்றேன் 
தணியேன்  தாகம்  நின்அருளைத்  தருதல்  இலையேல்  தாழ்வேனே. 
3
தாழ்வேன்  வஞ்ச  நெஞ்சகர்பால்  சார்வேன்  தனக்குன்  அருள்தந்தால் 
வாழ்வேன்  இலையேல்  என்செய்கேன்  வருத்தம்  பொறுக்க  மாட்டேனே 
ஏழ்வே  தனையும்  கடந்தவர்தம்  இன்பப்  பெருக்கே  என்உயிரே 
போழ்வேல்  கரங்கொள்  புண்ணியனே  புகழ்சேர்  தணிகைப்  பொருப்பரசே. 
4
அரைசே  அடியர்க்  கருள்குகனே  அண்ணா  தணிகை  ஐயாவே 
விரைசேர்  கடம்ப  மலர்ப்புயனே  வேலா  யுதக்கை  மேலோனே 
புரைசேர்  மனத்தால்  வருந்திஉன்றன்  பூம்பொற்  பதத்தைப்  புகழ்கில்லேன் 
தரைசேர்  வாழ்வில்  தயங்குகின்றேன்  அந்தோ  நின்று  தனியேனே. 
5
தனியே  துயரில்  வருந்திமனம்  சாம்பி  வாழ்க்கைத்  தளைப்பட்டிங் 
கினிஏ  துறுமோ  என்செய்கேன்  என்றே  நின்றேற்  கிரங்காயோ 
கனியே  பாகே  கரும்பேஎன்  கண்ணே  தணிகைக்  கற்பகமே 
துனிஏய்  பிறவி  தனைஅகற்றும்  துணையே  சோதிச்  சுகக்குன்றே. 
6
குன்றே  மகிழ்ந்த  குணக்குன்றே  கோவே  தணிகைக்  குருபரனே 
நன்றே  தெய்வ  நாயகமே  நவிலற்  கரிய  நல்உறவே 
என்றே  வருவாய்  அருள்தருவாய்  என்றே  புலம்பி  ஏங்குற்றேன் 
இன்றே  காணப்  பெறில்எந்தாய்  இறவேன்  பிறவேன்  இருப்பேனே. 
7
இருப்பேன்  துயர்வாழ்  வினில்எனினும்  எந்தாய்  நினது  பதங்காணும் 
விருப்பேன்  அயன்மால்  முதலோரை  வேண்டேன்  அருள  வேண்டாயோ 
திருப்பேர்  ஒளியே  அருட்கடலே  தெள்ளார்  அமுதே  திருத்தணிகைப் 
பொருப்பே  மகிழ்ந்த  புண்ணியமே  புனித  ஞான  போதகமே. 
8
போதா  நந்த  அருட்கனியே  புகலற்  கரிய  பொருளேஎன் 
நாதா  தணிகை  மலைஅரசே  நல்லோர்  புகழும்  நாயகனே 
ஓதா  தவமே  வருந்துயரால்  உழன்றே  பிணியில்  உலைகின்றேன் 
ஏதாம்  உனதின்  அருள்ஈயா  திருந்தால்  அந்தோ  எளியேற்கே. 
9
எளியேன்  நினது  திருவருளுக்  கெதிர்நோக்  குற்றே  இரங்குகின்ற 
களியேன்  எனைநீ  கைவிட்டால்  கருணைக்  கியல்போ  கற்பகமே 
அளியே  தணிகை  அருட்சுடரே  அடியர்  உறவே  அருள்ஞானத் 
துளியே  அமையும்  எனக்கெந்தாய்  வாஎன்  றொருசொல்  சொல்லாயே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com