திருவருட்பா  11. இரந்த விண்ணப்பம்

நாளை  ஏகியே  வணங்குதும்  எனத்தினம்  நாளையே  கழிக்கின்றோம் 
ஊளை  நெஞ்சமே  என்னையோ  என்னையோ  உயர்திருத்  தணிகேசன் 
தாளை  உன்னியே  வாழ்ந்திலம்  உயிர்உடல்  தணந்திடல்  தனைஇந்த 
வேளை  என்றறி  வுற்றிலம்  என்செய்வோம்  விளம்பரும்  விடையோமே. 
1
விடைய  வாழ்க்கையை  விரும்பினன்  நின்திரு  விரைமலர்ப்  பதம்போற்றேன் 
கடைய  நாயினேன்  எவ்வணம்  நின்திருக்  கருணைபெற்  றுய்வேனே 
விடையில்  ஏறிய  சிவபரஞ்  சுடர்உளே  விளங்கிய  ஒளிக்குன்றே 
தடையி  லாதபேர்  ஆனந்த  வெள்ளமே  தணிகைஎம்  பெருமானே. 
2
பெருமை  வேண்டிய  பேதையில்  பேதையேன்  பெருந்துயர்  உழக்கின்றேன் 
ஒருமை  ஈயும்நின்  திருப்பதம்  இறைஞ்சிலேன்  உய்வதெப்  படியேயோ 
அருமை  யாம்தவத்  தம்மையும்  அப்பனும்  அளித்திடும்  பெருவாழ்வே 
தரும  வள்ளலே  குணப்பெருங்  குன்றமே  தணிகைமா  மலையானே. 
3
மலையும்  வேற்கணார்  மையலில்  அழுந்தியே  வள்ளல்நின்  பதம்போற்றா 
தலையும்  இப்பெருங்  குறையினை  ஐயகோ  யாவரோ  டுரைசெய்கேன் 
நிலைகொள்  ஆனந்த  நிருத்தனுக்  கொருபொருள்  நிகழ்த்திய  பெருவாழ்வே 
தலைமை  மேவிய  சற்குரு  நாதனே  தணிகையம்  பதியானே. 
4
பதியும்  அப்பனும்  அன்னையும்  குருவும்நற்  பயன்தரு  பொருளாய 
கதியும்  நின்திருக்  கழல்அடி  அல்லது  கண்டிலன்  எளியேனே 
விதியும்  மாலும்நின்  றேத்திடும்  தெய்வமே  விண்ணவர்  பெருமானே 
வதியும்  சின்மய  வடிவமே  தணிகைமா  மலைஅமர்ந்  திடுவாழ்வே. 
5
வாழும்  நின்திருத்  தொண்டர்கள்  திருப்பதம்  வழுத்திடா  துலகத்தே 
தாழும்  வஞ்சர்பால்  தாழும்என்  தன்மைஎன்  தன்மைவன்  பிறப்பாய 
ஏழும்  என்னதே  ஆகிய  தையனே  எவர்எனைப்  பொருகின்றோர் 
ஊழும்  நீக்குறும்  தணிகைஎம்  அண்ணலே  உயர்திரு  வருள்தேனே. 
6
தேனும்  தெள்ளிய  அமுதமும்  கைக்கும்நின்  திருவருள்  தேன்உண்டே 
யானும்  நீயுமாய்க்  கலந்துற  வாடும்நாள்  எந்தநாள்  அறியேனே 
வானும்  பூமியும்  வழுத்திடும்  தணிகைமா  மலைஅமர்ந்  திடுதேவே 
கோனும்  தற்பர  குருவுமாய்  விளங்கிய  குமாரசற்  குணக்குன்றே. 
7
குன்று  பொய்உடல்  வாழ்வினை  மெய்எனக்  குறித்திவண்  அலைகின்றேன் 
இன்று  நின்திரு  வருள்அடைந்  துய்வனோ  இல்லைஇவ்  வுலகத்தே 
என்றும்  இப்படிப்  பிறந்திறந்  துழல்வனோ  யாதும்இங்  கறிகில்லேன் 
நன்று  நின்திருச்  சித்தம்என்  பாக்கியம்  நல்தணி  கையில்தேவே. 
8
தேவ  ரும்தவ  முனிவரும்  சித்தரும்  சிவன்அரி  அயன்ஆகும் 
மூவ  ரும்பணி  முதல்வநின்  அடியில்என்  முடிஉற  வைப்பாயேல் 
ஏவ  ரும்எனக்  கெதிர்இலை  முத்திவீ  டென்னுடை  யதுகண்டாய் 
தாவ  ரும்பொழில்  தணிகையம்  கடவுளே  சரவண  பவகோவே. 
9
வேயை  வென்றதோள்  பாவையர்  படுகுழி  விழுந்தலைந்  திடும்இந்த 
நாயை  எப்படி  ஆட்கொளல்  ஆயினும்  நாதநின்  செயல்அன்றே 
தாயை  அப்பனைத்  தமரினை  விட்டுனைச்  சார்ந்தவர்க்  கருள்கின்றோய் 
மாயை  நீக்குநல்  அருள்புரி  தணிகைய  வந்தருள்  இந்நாளே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com