திருவருட்பா · 9வியப்பு மொழி

மாதர் மணியே மகளேநீ வாய்த்த தவந்தான் யாதறியேன்
வேதர் அனந்தர் மால்அனந்தர் மேவி வணங்கக் காண்பரியார்
நாதர் நடன நாயகனார் நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர்
கோதர் அறியாத் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
1
திருவில் தோன்றும் மகளேநீ செய்த தவந்தான் யார்அறிவார்
மருவில் தோன்றும் கொன்றையந்தார் மார்பர் ஒற்றி மாநகரார்
கருவில் தோன்றும் எங்கள்உயிர் காக்க நினைத்த கருணையினார்
குருவிற் றோன்றும் தியாகர்தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
2
என்னா ருயிர்போல் மகளேநீ என்ன தவந்தான் இயற்றினையோ
பொன்னார் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொற்பதத்தார்
தென்னார் ஒற்றித் திருநகரார் தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
கொன்னார் சூலப் படையவரைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
3
சேலை நிகர்கண் மகளேநீ செய்த தவந்தான் செப்பரிதால்
மாலை அயனை வானவரை வருத்தும் படிக்கு மதித்தெழுந்த
வேலை விடத்தை மிடற்றணிந்தார் வீட்டு நெறியாம் அரசியற்செங்
கோலை அளித்தார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
4
தேனேர் குதலை மகளேநீ செய்த தவந்தான் எத்தவமோ
மானேர் கரத்தார் மழவிடைமேல் வருவார் மருவார் கொன்றையினார்
பானேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல்சடைமேல்
கோனேர் பிறையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
5
வில்லார் நுதலாய் மகளேநீ மேலை நாட்செய் தவம்எதுவோ
கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரியக் கண்விழித்தார்
வில்லார் விசையற் கருள்புரிந்தார் விளங்கும் ஒற்றி மேவிநின்றார்
கொல்லா நெறியார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
6
அஞ்சொற் கிளியே மகளேநீ அரிய தவமே தாற்றினையோ
வெஞ்சொற் புகலார் வஞ்சர்தமை மேவார் பூவார் கொன்றையினார்
கஞ்சற் கரியார் திருஒற்றிக் காவல் உடையார் இன்மொழியால்
கொஞ்சத் தருவார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
7
பூவாய் வாட்கண் மகளேநீ புரிந்த தவந்தான் எத்தவமோ
சேவாய் விடங்கப் பெருமானார் திருமால் அறியாச் சேவடியார்
காவாய்ந் தோங்கும் திருஒற்றிக் காவல் உடையார் எவ்வௌர்க்கும்
கோவாய் நின்றார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
8
மலைநேர் முலையாய் மகளேநீ மதிக்கும் தவமே தாற்றினையோ
தலைநேர் அலங்கல் தாழ்சடையார் சாதி அறியாச் சங்கரனார்
இலைநேர் தலைமுன் றொளிர்படையார் எல்லாம் உடையார் எருக்கின்மலர்க்
குலைநேர் சடையார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
9
மயிலின் இயல்சேர் மகளேநீ மகிழ்ந்து புரிந்த தெத்தவமோ
வெயிலின் இயல்சேர் மேனியினார் வெண் றுடையார் வெள்விடையார்
பயிலின் மொழியாள் பாங்குடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார்
குயிலிற் குலவி அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com