
திருவுளந் தெரியேன் திகைப்புறு கின்றேன்
சிறியரிற் சிறியனேன் வஞ்சக்
கருவுளக் கடையேன் பாவியேன் கொடிய
கன்மனக் குரங்கனேன் அந்தோ
வெருவுறு கின்றேன் அஞ்சல்என் றின்னே
விரும்பிஆட் கொள்ளுதல் வேண்டும்
மருவுமா கருணைப் பெருங்கடல் அமுதே
வள்ளலே என்பெரு வாழ்வே.
தாயும் தந்தையும் தெய்வமும் குருவும்
தாங்கு கின்றதோர் தலைவனும் பொருளும்
ஆயும் இன்பமும் அன்பும்மெய் அறிவும்
அனைத்தும் நீஎன ஆதரித் திருந்தேன்
ஏயும் என்னள விரக்கம்ஒன் றிலையேல்
என்செய் வேன்இதை யார்க்கெடுத் துரைப்பேன்
சேயும் நின்னருள் நசைஉறுங் கண்டாய்
தில்லை மன்றிடைத் திகழ்ஒளி விளக்கே.
அருள்பழுத் தோங்கும் கற்பகத் தருவே
அருண்மருந் தொளிர்குணக் குன்றே
அருள்எனும் அமுதந் தரும்ஒரு கடலே
அருட்கிர ணங்கொளும் சுடரே
அருள்ஒளி வீசும் அரும்பெறன் மணியே
அருட்சுவை கனிந்தசெம் பாகே
அருள்மணம் வீசும் ஒருதனி மலரே
அருண்மய மாம்பர சிவமே.



