திருவருட்பா · 81தரிசனப் பதிகம்

திருவார் பொன்னம் பலநடுவே தெள்ளார் அமுதத் திரள்அனைய
உருவார் அறிவா னந்தநடம் உடையார் அடியார்க் குவகைநிலை
தருவார் அவர்தம் திருமுகத்தே ததும்பும் இளவெண் ணகைகண்டேன்
இருவா தனைஅற் றந்தோநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
1
பொன்நா யகனும் புரந்தரனும் பூவாழ் பவனும் புகழ்ந்தேத்த
மின்னார் பொன்னம் பலநடுவே விளங்கும் கருணை விழிவழங்கும்
அன்னார் அறிவா னந்தநடம் ஆடும் கழல்கண் டகங்குளிர்ந்தேன்
என்நா யகனார் அவர்கழலை இன்னும் ஒருகால் காண்பேனோ.
2
தாயிற் பெரிய கருணையினார் தலைமா லையினார் தாழ்சடையார்
வாயிற் கினிய புகழுடைய வள்ளல் அவர்தந் திருஅழகைக்
கோயிற் கருகே சென்றுமனம் குளிரக் கண்டேன் பிரிவுற்றேன்
ஈயில் சிறியேன் அவர் அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ.
3
புன்கண் அகற்றும் மெய்யடியார் போற்றும் பொன்னம் பலநடுவே
வன்கண் அறியார் திருநடஞ்செய் வரதர் அமுதத் திருமுகத்தை
முன்கண் உலகில் சிறியேன்செய் முழுமா தவத்தால் கண்டேன்நான்
என்கண் அனையார் அவர்முகத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
4
அன்புற் றடியார் தொழுதேத்த அணியார் மணிப்பொன் அம்பலத்தே
வன்புற் றழியாப் பெருங்கருணை மலையார் தலையார் மாலையினார்
மன்புற் றரவார் கச்சிடையின் வயங்க நடஞ்செய் வதுகண்டேன்
இன்புற் றடியேன் அவர்நடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
5
இம்மா நிலத்தில் சிவபதமீ தென்னும் பொன்னம் பலநடுவே
அம்மால் அறியா அடிகள்அடி அசைய நடஞ்செய் வதுகண்டேன்
எம்மால் அறியப் படுவதல என்என் றுரைப்பேன் ஏழையன்யான்
எம்மான் அவர்தந் திருநடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
6
சிறியேன் தவமோ எனைஈன்றாள் செய்த தவமோ யான்அறியேன்
மறியேர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார் தமைக்கண்டேன்
பிறியேன் எனினும் பிரிந்தேன்நான் பேயேன் அந்தப் பிரிவினைக்கீழ்
எறியேன் அந்தோ அவர்தம்மை இன்னும் ஒருகால் காண்பேனோ.
7
அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத்
தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன்
மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன்
இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
8
அன்னோ திருஅம் பலத்தேஎம் ஐயர் உருக்கண் டேன்அதுதான்
பொன்னோ பவளப் பொருப்பதுவோ புதுமா ணிக்க மணித்திரளோ
மின்னோ விளக்கோ விரிசுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன்
என்னோ அவர்தந் திருஉருவை இன்னும் ஒருகால் காண்பேனோ.
9
பொன்என் றுரைக்கும் அம்பலத்தே புனித னார்தம் அழகியலை
உன்என் றுரைப்பேன் என்னேஎன் உள்ளம் சிறிதும் உணர்ந்ததிலை
மின்என் றுரைக்கும் படிமூன்று விளக்கும் மழுங்கும் எனில்அடியேன்
என்என் றுரைப்பேன் அவர்அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ.
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com