திருவருட்பா · 8முத்தி உபாயம்

ஒற்றி ஊரனைப்
பற்றி நெஞ்சமே
நிற்றி நீஅருள்
பெற்றி சேரவே.-
1
சேர நெஞ்சமே
தூரம் அன்றுகாண்
வாரம் வைத்தியேல்
சாரும் முத்தியே.
2
முத்தி வேண்டுமேல்
பத்தி வேண்டுமால்
சத்தி யம்இது
புத்தி நெஞ்சமே.
3
நெஞ்ச மேஇது
வஞ்ச மேஅல
பிஞ்ச கன்பதம்
தஞ்சம் என்பதே.
4
என்ப தேற்றவன்
அன்ப தேற்றுநீ
வன்பு மாற்றுதி
இன்பம் ஊற்றவே.-
5
ஊற்றம் உற்றுவெண்
நீற்றன் ஒற்றியூர்
போற்ற நீங்குமால்
ஆற்ற நோய்களே.-
6
நோய்கள் கொண்டிடும்
பேய்கள் பற்பலர்
தூய்தன் ஒற்றியூர்க்
கேய்தல் இல்லையே.
7
இல்லை இல்லைகாண்
ஒல்லை ஒற்றியூர்
எல்லை சேரவே
அல்லல் என்பதே.-
8
அல்லல் என்பதேன்
தொல்லை நெஞ்சமே
மல்லல் ஒற்றியூர்
எல்லை சென்றுமே.-
9
சென்று வாழ்த்துதி
நன்று நெஞ்சமே
என்றும் நல்வளம்
ஒன்றும் ஒற்றியே.-
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com