திருவருட்பா  75. சிந்தைத் திருப்பதிகம்

விடைஆர்க்கும்  கொடிஉடைய  வித்தகஎன்  றுன்அடியின் 
இடைஆர்த்து  நின்றழும்இவ்  ஏழைமுகம்  பாராமே 
நடைஆர்க்கும்  வாழ்க்கையிலே  நல்குரவோர்க்  கீயாத 
உடையார்க்கோ  என்னை  உடையாய்  உதவுவதே. 
1
கற்றே  அறியாக்  கடைப்புலையேன்  ஆனாலும் 
உற்றேநின்  தன்னைநினைந்  தோதுகின்றேன்  அல்லாமே 
மற்றேதும்  தேறேன்என்  வன்துயர்தீர்ந்  துள்குளிரச் 
சற்றே  இரங்கித்  தயவுசெய்தால்  ஆகாதோ. 
2
கல்லா  ரொடும்திரிந்தென்  கண்ணேநின்  தாள்வழுத்தும் 
நல்லார்  தமைக்காண  நாணுகின்றேன்  ஆனாலும் 
வல்லாய்நின்  தன்னைஅன்றி  மற்றொன்  றறியேன்நான் 
எல்லாம்  அறிவாய்க்  கிதனைஇயம்  பல்என்னே. 
3
கள்ளநெறி  கொள்ளும்  கடைநாயேன்  என்னினும்நின் 
வள்ளல்  மலர்த்தாளே  வழுத்துகின்றேன்  என்னுடைய 
உள்ள  மெலிவோ  டுடல்மெலிவும்  கண்டும்அந்தோ 
எள்ளளவும்  எந்தாய்  இரங்கா  திருந்தனையே. 
4
சீர்துணையார்  தேடும்  சிவனேநின்  தன்னைஅன்றி 
ஓர்துணையும்  இல்லேன்நின்  ஒண்பொற்  பதம்அறிய 
கார்துணையா  நாடும்  கலாபிஎன  நாடுகின்றேன் 
ஆர்துணைஎன்  றையா  அகல  இருந்தனையே. 
5
பேய்அனையா  ரோடும்  பிழைபுரிந்தேன்  ஆனாலும் 
நாய்அனையேன்  நின்னுடைய  நாமம்  நவிற்றுகின்றேன் 
தீஅனைய  துன்பில்  திகைக்கின்றேன்  கண்டிருந்தும் 
தாய்அனையாய்  சற்றும்  தயவு  புரிந்திலையே. 
6
வெள்ள  மருவும்  விரிசடையாய்  என்னுடைய 
உள்ள  விரிவும்  உடல்மெலிவும்  கண்டிருந்தும் 
தள்ளரிய  நின்னருள்ஓர்  சற்றும்  புரியாமே 
கள்ளவினைக்  கென்உளத்தைக்  கைகாட்டி  நின்றனையே. 
7
என்னுரிமைத்  தாய்க்கும்  இனியாய்நின்  ஐந்தெழுத்தை 
உன்னுநிலைக்  கென்னை  உரித்தாக்க  வேண்டுதியேல் 
மன்னுலகில்  பொன்னுடையார்  வாயில்தனைக்  காத்தயர்ந்தேன் 
தன்னுடைய  எண்ணந்  தனைமுடிக்க  வேண்டுவதே. 
8
குற்றம்எலாம்  நல்ல  குணமாகக்  கொண்டருளும் 
உற்றதுணை  நீயேமற்  றோர்துணையும்  இல்லைஎன்றே 
நற்றலைமை  யாம்உனது  நாமம்  நவில்கின்றேன் 
கற்றவனே  என்றனைநீ  கைவிடில்என்  செய்வேனே. 
9
அறியாப்  பருவத்  தறிவுறுத்தி  ஆட்கொண்ட 
நெறியானே  நின்ஆணை  நின்ஆணை  நின்ஆணை 
பொறியார்நின்  நாமம்  புகலுவதே  அன்றிமற்றை 
வெறியார்வன்  நாமமொன்றும்  வேண்டேன்நான்  வேண்டேனே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com