திருவருட்பா · 6திருவருள் வழக்க விளக்கம்

தோடுடை யார்புலித் தோலுடை யார்கடல் தூங்கும்ஒரு
மாடுடை யார்மழு மான்உடை யார்பிர மன்தலையாம்
ஓடுடை யார்ஒற்றி யூர்உடை யார்புகழ் ஓங்கியவெண்
காடுடை யார்நெற்றிக் கண்உடை யார்எம் கடவுளரே.
1
வண்ணப்பல் மாமலர் மாற்றும் படிக்கு மகிழ்ந்தெமது
திண்ணப்பர் சாத்தும் செருப்படி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய்
உண்ணப் பரிந்துநல் ஊன்தர உண்டுகண் ஒத்தக்கண்டே
கண்ணப்ப நிற்க எனக்கைதொட் டார்எம் கடவுளரே.
2
செல்இடிக் கும்குரல் கார்மத வேழச் சினஉரியார்
வல்அடுக் கும்கொங்கை மாதொரு பாகர் வடப்பொன்வெற்பாம்
வில்எடுக் கும்கையர் சாக்கியர் அன்று விரைந்தெறிந்த
கல்லடிக் கும்கதி காட்டினர் காண்எம் கடவுளரே.
3
ஏழியல் பண்பெற் றமுதோ டளாவி இலங்குதமிழ்க்
கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்டக் கிளர்ந்தநற்சீர்
வீழியில் தம்பதிக் கேவிடை கேட்கவெற் பாள்உடனே
காழியில் தன்னுருக் காட்டின ரால்எம் கடவுளரே.
4
நாட்டில் புகழ்பெற்ற நாவுக் கரசர்முன் நாள்பதிகப்
பாட்டிற் கிரக்கம்இல் லீர்எம் பிரான்எனப் பாடஅன்றே
ஆட்டிற் கிசைந்த மலர்வாழ்த்தி வேதம் அமைத்தமறைக்
காட்டில் கதவம் திறந்தன ரால்எம் கடவுளரே.
5
பைச்சூர் அரவப் படநடத் தான்அயன் பற்பலநாள்
எய்ச்சூர் தவஞ்செய் யினும்கிடை யாப்பதம் ஏய்ந்துமண்மேல்
வைச்சூரன் வன்தொண்டன் சுந்தரன் என்னுநம் வள்ளலுக்குக்
கச்சூரில் சோறிரந் தூட்டின ரால்எம் கடவுளரே.
6
ஏணப் பரிசெஞ் சடைமுத லானஎல் லாம்மறைத்துச்
சேணப் பரிகள் நடத்திடு கின்றநல் சேவகன்போல்
மாணப் பரிபவம் நீக்கிய மாணிக்க வாசகர்க்காய்க்
காணப் பரிமிசை வந்தன ரால்எம் கடவுளரே.
7
எல்லாம் செயவல்ல சித்தரின் மேவி எழில்மதுரை
வல்லாரின் வல்லவர் என்றறி யாமுடி மன்னன்முன்னே
பல்லா யிரஅண்ட மும்பயம் எய்தப் பராக்கிரமித்துக்
கல்லானை தின்னக் கரும்பளித் தார்எம் கடவுளரே.
8
மால்எடுத் தோங்கிய மால்அயன் ஆதிய வானவரும்
ஆல்அடுத் தோங்கிய அந்தண னேஎன் றடைந்திரண்டு
பால்எடுத் தேத்தநம் பார்ப்பதி காணப் பகர்செய்மன்றில்
கால்எடுத் தாடும் கருத்தர்கண் டீர்எம் கடவுளரே.
9
மாற்பதம் சென்றபின் இந்திரர் நான்முகர் வாமனர்மான்
மேற்பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல்மற்றுள்ளோர்
ஆற்பதம் கொண்டபல் ஆயிரம் கோடிஅண் டங்கள்எல்லாம்
காற்பதம் ஒன்றில் ஒடுக்கிநிற் பார்எம் கடவுளரே.
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com