திருவருட்பா · 50ஆற்றா விண்ணப்பம்

அன்னையில் பெரிதும் இனியஎன் அரசே அம்பலத் தாடல்செய் அமுதே
பொன்னைஒத் தொளிரும் புரிசடைக் கனியே போதமே ஒற்றிஎம் பொருளே
உன்னைவிட் டயலார் உறவுகொண் டடையேன் உண்மைஎன் உள்ளம்நீ அறிவாய்
என்னைவிட் டிடில்நான் என்செய்வேன் ஒதிபோல் இருக்கின்ற இவ்வெளி யேனே.
1
எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என்செய்வேன் என்செய்வேன்பொல்லாக்
களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய் திலைஅருட் கரும்பே
அளியனே திருச்சிற் றம்பலத் தொளியே அருமருந் தேவட வனத்துத்
தனியனே ஒற்றித் தலத்தமர் மணியே தயையிலி போல்இருந் தனையே.
2
இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் என்துயர் அறிந்திலை போலும்
முருந்தனை முறுவல் மங்கையர் மலைநேர் முலைத்தலை உருண்டன னேனும்
மருந்தனை யாய்உன் திருவடி மலரை மறந்திலேன் வழுத்துகின் றனன்காண்
வருந்தனை யேல்என் றுரைத்திலை ஐயா வஞ்சகம் உனக்கும்உண் டேயோ.
3
உண்டநஞ் சின்னும் கண்டம்விட் டகலா துறைந்தது நாடொறும் அடியேன்
கண்டனன் கருணைக் கடல்எனும் குறிப்பைக் கண்டுகண் டுளமது நெகவே
விண்டனன் என்னைக் கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன்நான் அன்றோ
அண்டர்கட் கரசே அம்பலத் தமுதே அலைகின்றேன் அறிந்திருந் தனையே.
4
தனையர்செய் பிழையைத் தந்தையர் குறித்துத் தள்ளுதல் வழக்கல என்பார்
வினையனேன் பிழையை வினையிலி நீதான் விவகரித் தெண்ணுதல் அழகோ
உனையலா திறந்தும் பிறந்தும்இவ் வுலகில் உழன்றிடுந் தேவரை மதியேன்
எனையலா துனக்கிங் காளிலை யோஉண்டென்னினும் ஏன்றுகொண் டருளே.
5
ஏன்றுகொண் டருள வேண்டும்இவ் எளியேன் இருக்கினும் இறக்கினும் பொதுவுள்
ஊன்றுகொண் டருளும் நின்னடி யல்லால் உரைக்கும்மால் அயன்முதல் தேவர்
நான்றுகொண் டிடுவ ரேனும்மற் றவர்மேல் நாஎழா துண்மையீ திதற்குச்
சான்றுகொண் டருள நினைத்தியேல் என்னுள் சார்ந்தநின் சரண்இரண் டன்றே.
6
சரணவா ரிசம்என் தலைமிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன்
கரணவா தனையும் கந்தவா தனையும் கலங்கிடக் கபமிழுத் துந்தும்
மரணவா தனைக்கென் செய்குவம் என்றே வருந்துகின் றனன்மனம் மாழாந்
தரணமூன் றெரிய நகைத்தஎம் இறையே அடியனை ஆள்வதுன் கடனே.
7
கடம்பொழி ஓங்கல் உரிஉடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே
மடம்பொழி மனத்தேன் மலஞ்செறிந் தூறும் வாயில்ஓர் ஒன்பதில் வரும்இவ்
உடம்பொழிந் திடுமேல் மீண்டுமீண் டெந்தஉடம்புகொண் டுழல்வனோஎன்று
நடம்பொழி பதத்தாய் நடுங்குகின் றனன்காண் நான்செயும் வகைஎது நவிலே.
8
வகைஎது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்தெனை ஆளும்
தகைஅது இன்றேல் என்செய்வேன் உலகர் சழக்குடைத் தமியன்நீ நின்ற
திகைஎது என்றால் சொலஅறி யாது திகைத்திடும் சிறியனேன் தன்னைப்
பகைஅது கருதா தாள்வதுன் பரங்காண் பவளமா நிறத்தகற் பகமே.
9
கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக் கல்விகற் றுழன்றனன் கருணை
சொற்பன மதிலும் காண்கிலேன் பொல்லாச் சூகரம் எனமலம் துய்த்தேன்
விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகிலா வெறியேன்
அற்பனேன் தன்னை ஆண்டநின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே.
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com